Social Icons

Saturday 10 August 2013

பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா ?


பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா இறந்த போன கணவரது சொத்தில் (சுய சம்பாத்தியம்) பங்கு பிரிப்பது எவ்வாறு? வாரிசுகள் 1 மனைவி,2 மகன்,1 மகள். மகனில் 1மகன் 25 வருடங்களாக தனிக்குடித்தனம் இருக்கின்றார், தாயை கவனிப்பது இல்லை. சொத்து உண்டாக்கியதில் மகனின் பங்கு எதுவும் கிடையாது. மகள் தாயை பராமரித்து வருகின்றார். இந்த நிலையில் இறந்தவரின் வஸிய்யத்தை எவ்வாறு பூர்த்தி செய்வது?

தனிக்குடித்தனம் இருப்பது சொத்துரிமையை பாதிக்காது, தாயைக் கவனிப்பதும் கவனிக்காமல் இருப்பதும் சொத்துரிமை சட்டத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. சொத்தைப் பெருக்குவதில் ஒருவருக்கு எந்த அளவுக்கு பங்களிபு உள்ளது என்பதற்கும் வாரிசுரிமை சட்ட்த்துக்கும் சம்மந்தம் இல்லை. 

குடும்பத்துடன் சேர்ந்து குட்டுக் குடும்பமாக இருப்பவருக்கும் தனிக்குடித்தமாக வாழ்பவருக்கும் சம்மான சொஇத்துரிமை தான் உள்ளது. பெற்றோரைக் கவனிக்கும் பிள்ளைகளுக்கும் கவனிக்காத பிள்ளைகளுக்கும் சமமான உரிமை தான் உள்ளது சொத்தைப் பெருக்குவதில் உழைத்தவருக்கும் உழைக்காதவருக்கும் சமமான பங்குதான் உள்ளது. 

உயிருடன் இருக்கும் போதே ஒருமகன் கஷ்டப்பட்டு தொழிலைப் பெருக்குகிறான். இனொரு மகன் தறுதலையாகத் திரிகிறன் என்றால் உயிருடன் இருக்கும் போது பாடுபடும் மகனுக்கு சில சொத்துக்களை எழுதி வைத்தால் அது பிள்ளைகள் மத்தியில் பாரபட்சம் காட்டியதாக ஆகாது. 

உழைப்பவன் உழைக்காதவன் என்ற அடிப்படையில் பாரபட்சம் காட்டினால் அது சரியான நீதியாகும். அப்படி செய்யாமல் சொத்துக்கு உரியவர் இறந்து விட்டால் அனைவருக்கும் இஸ்லாம் வழங்கியுள்ள குறித்த சதவிகிதம் சமமாக கிடைக்கும்

 இறந்தவருக்குப் பிள்ளைகள் இருந்தால் மனைவிக்கு மொத்த சொத்தில் எட்டில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். 

உங்களுக்குக் குழந்தை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம் உங்கள் மனைவியர்களுக்கு உண்டு. அல்குர்ஆன் (4 : 12)

 இறந்தவருக்கு பிள்ளைகளோடு பெற்றோர் இருந்தால் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் தரப்பட வேண்டும். 

அவருக்கு(இறந்தவருக்கு)ச் சந்ததி இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் பெற்றோர் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு. அல்குர்ஆன் (4 : 11) 

மீதமுள்ள சொத்துக்கள் மகனுக்கு இரண்டு பங்கு மகளுக்கு ஒரு பங்கு என்ற அடிப்படையில் பங்கிடப்பட வேண்டும். 

"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். அல்குர்ஆன் (4 : 11)

 இறந்தவருடைய மொத்த சொத்து விபரம் அளிக்கப்படாததால் இந்த தகவலை வைத்து நீங்களே வாரிசுதார்களுக்கிடையில் பங்கிட்டு கொள்ளலாம். 

இறந்தவர் ஏதேனும் வஸிய்யத் எனும் மரண சாசனம் செய்திருந்தால் அதை சொத்து பங்கீடு செய்வதற்கு முன் நிறைவேற்றிட வேண்டும். 

இவை யாவும்) அவர் செய்த மரண சாசனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரே. 
அல்குர்ஆன்  4 11

 மரணசாசனத்திற்கு நில நிபந்தனைகள் உண்டு. இறந்தவர் செய்த வஸிய்யத் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாகி விடக்கூடாது.

 அவ்வாறு அதிகமாகி இருந்தால் அந்த வஸிய்யத் செல்லாது. மூன்றில் ஒரு பங்கு என்ற அளவே செல்லுபடியாகும். மேலும் இறந்தவரின் சொத்தில் யார் பங்குதாரர்களாக வாரிசுதாரர்களாக வருகிறார்களோ அவர்களுக்கு வஸிய்யத் செய்திருந்தால் அதுவும் செல்லாது.

 அவர்கள் தங்களுக்குரிய பங்கின் அளவை மட்டுமே பெற்றுக் கொள்வார்கள். பின்வரும் நபிமொழிகளில் இதற்கான ஆதாரத்தை காணலாம். 

சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (இறுதி  ஹஜ்ஜின் போது மக்காவில்) நான் நோயுற்று விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். நான், "அல்லாஹ்வின் தூதரே! என் கால்சுவடுகüன் வழியே என்னைத் திருப்பியனுப்பி விடாமல் (பழைய மார்க்கத்திற்கே திரும்பிச் செல்லும்படி செய்து விடாமல்) இருக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்று சொன்னேன்.

 நபி (ஸல்)அவர்கள், "அல்லாஹ்  உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தந்து, உங்களால் மக்கள் சிலருக்குப் பயன் தருவான்'' என்று கூறினார்கள். "நான் மரண சாசனம் செய்ய விரும்புகிறேன். எனக்கிருப்பதெல்லாம் ஒரு மகள் தான். (என் சொத்தில்) பாதி பாகத்தை (நற்காரியங்களுக்காக) மரண சாசனம் செய்து விடட்டுமா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "பாதி அதிகம் தான்'' என்று கூறினார்கள். நான் "அப்படி யென்றால் மூன்றிலொரு பங்கு?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கும் அதிகம்  தான்--- அல்லது பெரியது தான்'' என்று கூறினார்கள். 

ஆகவே, மக்கள் மூன்றிலொரு பங்கை மரண சாசனம் செய்தார்கள். அது செல்லும் என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள். புகாரி 2744 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (தொடக்கக் காலத்தில்) சொத்து பிள்ளைக்குரியதாகவும்  மரண சாசனம் தாய்தந்தைக்குரியதாகவும் இருந்தது.  தான் விரும்பியதை அதிலிருந்து அல்லாஹ் மாற்றி விட்டான். இரு பெண்கüன் பங்குக்குச் சமமானதை ஆணுக்கு (அவனது பங்காக) நிர்ணயித்தான். தாய் தந்தையரில் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பங்கை நிர்ணயித்தான். மனைவிக்கு எட்டில் ஒரு பங்கையும், நான்கில் ஒரு பங்கையும் கணவனுக்குப் பாதியையும் நான்கில் ஒரு பங்கையும் நிர்ணயித்தான்  (புகாரி 2747)

 இரண்டு மகன்களில் ஒருவர் தாயைக் கவனிக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள். தாயை கவனிக்கவில்லை என்பது பெருங்குற்றம் என்பதில் சந்தேகமில்லை. எனினும் இதனால் தந்தையின் சொத்திலிருந்து அவனுக்கு (மகனுக்கு) வந்து சேரவேண்டிய பங்கில் பாதிப்பு ஏற்படாது. தந்தையின் சொத்திலிருந்து அவனுக்குரிய பங்கு அவனுக்கு கிடைத்து விடும். பெற்றோர்களைக் கவனிக்குமாறும் அவர்களின் மனம் நோகாது நடந்து கொள்ளுமாறு இஸ்லாம் பிள்ளைகளுக்குக் கட்டளையிடுகின்றது. பெற்றோர்களின் மனதை நோவினை செய்வது பெரும்பாவம் என்று நமது மார்க்கத்தில் சொல்லப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் தாயை கவனிக்கத் தவறிய குற்றத்திற்குரிய தண்டனையை இறைவன் அப்பிள்ளைகளுக்கு வழங்குவான் என்ற எச்சரிக்கையை அவரது மகனுக்கு நினைவூட்டுங்கள். அவர் திருந்தி தனது தாயைக் கவனிக்க கூடும்.

                                                                                           onlinepj

No comments:

Post a Comment

குர்ஆனை புரிந்து படியுங்கள் பரப்புங்கள்

தொழுகையில் ஓதும் அத்தஹியாத்